Tuesday, 14 April 2015

2 பணி நிறைவு பெற்றேன்


ஊரில் எனக்கொரு மதிப்பைத் தந்ததும்,
உற்றார் உறவினர் மத்தியில்
பேரைத் தந்ததும், பிழைப்பைத் தந்ததும்,
பெரிய மனிதரும் வணங்கிடும்
சீரைத் தந்ததும், சிறப்பைத் தந்ததும்,
செல்வ வளர்ச்சியைத் தந்ததும்,
பாரில் நல்லதோர் மனைவி தந்ததும்,
பழக்க வட்டங்கள் தந்ததும்,

உடன்பி றந்தவர் படிக்க வைத்ததும்,
உற்ற தந்தைநோய் தீர்த்ததும்,
கடனும் உடனுமாய்த் தங்கை மார்களைக்
கட்டிக் கொடுத்ததும் காத்ததும்,
உடைமை யாகவே வீடு, வாகனம்,
உரொக்கம், நகையெனச் சேர்த்ததும்,
பிடியில் சேர்மரு மகன்கள் வந்ததும்,
பேரன் பேத்திகள் எடுத்ததும்,

இந்த வேலையால் தானே? இறைவனே,
இன்று இதனைநான் முடிக்கிறேன்!
முந்தும் உணர்ச்சிகள் முட்டிச் சூழ்ந்தெனை
மூழ்க டிக்குதே வெள்ளமாய்!
இன்ப உணர்ச்சியும் துன்ப உணர்ச்சியும்
என்னைக் கௌவுதே மௌனமாய்!
என்ன சொல்லுவேன்? என்ன செய்குவேன்?
இதயம் கொல்லுதே சன்னமாய்!

அரசுத் துறையினில் அறிவு, செயல்திறன்,
அகவை, அனுபவம் எதற்குமே
உரிய மதிப்பிலை; உழைப்பிற் குயர்விலை;
உளைந்து சாவதில் பயனிலை!
பெரிய துரையையும் சிறிய வேலையாள்
பேரைச் சொல்லியே மிரட்டுவான்!
நரிகள் போன்றவர் நயக்கும் துறையது;
நமக்குச் சரிப்பட வில்லையே!

எனக்கொர் திறமையை இறைவன் நல்கினான்
இனிய கவிதைகள் புனைவது;
மனத்தில் இதனைநான் வைத்து மறுகியே
வாழ்க்கை இதுவரை கழிந்தது!
அனைத்தும் அறிந்தவா! குடத்து விளக்கினை
அகிலம் அறியவே ஏற்றுவாய்!
இனிக்கும் தீந்தமிழ் மணக்கும் பூந்தமிழ்
என்னை யாளவே மாற்றுவாய்! 9840382003

No comments:

Post a Comment