Tuesday, 14 April 2015

8 பொது மக்களே பொது மக்களே


பொது மக்களே! பொது மக்களே! - ரொம்பப்
புத்திகெட்டுப் போனீர்கள் பொதுமக்களே!

அரசாங்கம் சரியில்லை என்று சொல்கிறீர்! - பின்
அவனிடமே துட்டைவாங்கி ஓட்டுப் போடுறீர்!

லஞ்சவூழல் பெருகிப்போச்சு என்று கத்துறீர்! - வீட்டில்
லஞ்சம்வரும் மாப்பிள்ளைக்கே பெண்ணைக் கொடுக்கிறீர்!

கொள்ளை அடிக்கிறான் பாவி என்று குதிக்கிறீர்! - பணத்தைக்
கொட்டியந்தப் பள்ளியில்தான் மகனைச் சேர்க்கிறீர்!

ஆபாசம் ஆபாசம் என்று கொதிக்கிறீர்! - தினம்
அந்தப்பெட்டி முன்புதானே பொழுதைக் கழிக்கிறீர்?

அநியாயம் அநியாயம் என்று சொல்லியே - அந்த
அநியாயத் தில்நீரும் பங்கு கொள்கிறீர்!
அநியாயத் தைஒழிக்கச் சக்தி இல்லையா? - கையில்
அதைவெட்டி எரிகின்ற கத்தி இல்லையா?

ஒற்றுமையின் பலமறிந்து ஒன்று பாடுங்களேன்!
உள்ளத்தில் பயமொழிந்து குரல் கொடுங்களேன்!
முதல்மாற்றம் உங்களுக்குள் கொண்டு வருங்களேன்!
முழுவதும் மாறிவரப் பாடு படுங்களேன்! 9840382003

No comments:

Post a Comment